திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை வட்ட பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜீன் பேசிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து என கட்சியின் மாநில நிர்வாகிகளே தெரிவித்து விட்டனர். எனவே இதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை. விசிக சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படக்கூடிய மாநாடு. மக்கள் விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகிறது. இதில் அரசியல் கலக்க கூடாது என விசிக தலைவரும், மது விலக்கு துறை அமைச்சரும் தெரிவித்து விட்டனர். இவ்வாறு கூறினார்.