மதுரை: திருச்சியைச் சேர்ந்த தனபாலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தொழில் காரணங்களுக்காக திருச்சி அரசுடமை வங்கியில் ரூ.1.7 கோடி கடன் வாங்கினேன். கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி எனது சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதுபோல், பல்வேறு மாவட்டங்களில், வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால், வாகனம், வீடு, சொத்துக்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவதாக அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரிய பல்வேறு மனுக்களும் நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சுந்தர்மோகன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள், ‘‘சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களிலும் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படுவதாக தெரியவில்லை. மதுரையில் தீர்ப்பாய அதிகாரி விடுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. கோவை கடன் வசூல் தீர்ப்பாய அதிகாரி பணியிடமும் காலியாக உள்ளது. ஒன்றிய அரசு கடன் வசூல் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால், நாங்களே நடத்திக் கொள்கிறோம்.’’ என்றனர்.