லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உணவகங்களில் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் பழச்சாறில் சிறுநீர் கலந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சஹாரன்பூர் மாவட்டத்தில் ரொட்டி தயாரிக்கும் பெண் ஒருவர் அதில் எச்சில் உமிழும் வீடியோவும் வைரலாகி சர்ச்சையானது.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டலை நடத்துபவர்கள், உரிமையாளர்கள், மேலாளர்களின் பெயர்கள், முகவரிகள் கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும்.
சமையல்காரர்கள், பணியாளர்கள் முககவசம் மற்றும் கையுறைகளை கண்டிப்பாக அணிய வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் உணவு பொருட்களின் தூய்மை மற்றும் புனித தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஆதித்யநாத் வலியுறுத்தி இருக்கிறார்.