திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நடிகை அளித்த புகாரின் பேரில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்ட மலையாள சினிமா தயாரிப்பு நிர்வாகியான ஷானு இஸ்மாயில் கொச்சியில் உள்ள ஓட்டல் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஷானு இஸ்மாயில். மலையாள சினிமா தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். கடந்த 2018ம் ஆண்டு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி ஷானு இஸ்மாயில் தன்னை பலாத்காரம் செய்ததாக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நடிகை மியூசியம் போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஷானு இஸ்மாயில் கொச்சி பள்ளிமுக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த 11ம் தேதி 2 நண்பர்களுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு நண்பர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று நீண்ட நேரமாக அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஷானு இஸ்மாயில் குளியலறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அறை முழுதும் மது பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து எர்ணாகுளம் மத்திய போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஷானு இஸ்மாயிலின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.