ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் பழுதடைந்துள்ள 2 கண்ணாடி மாளிகைகளையும் உடனடியாக புனரமைக்க தோட்டக்கலை்ததுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
அதே போல் பெரணி செடிகள், கள்ளிச்செடிகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் இந்த பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. பெரணி செடிகளுக்கு என்று தனியான கண்ணாடி மாளிகை உள்ளது. இதில், பல்வேறு வகையான பெரணி செடிகள் உள்ளன. இவைகளை சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அதேபோல பல்வேறு வகையான கள்ளிச்செடிகளும் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கென தனியான ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான கள்ளி செடிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும்.
இதனை சுற்றுலாப் பயணிகள் சென்றனர். ஆனால், இந்த இரு கண்ணாடி மாளிகைகளும் நூற்றாண்டை கடந்த நிலையில் தற்போது இதன் மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் விழத் துவங்கியுள்ளன. இதனால், சுற்றுலா பயணிளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை தவிர்க்கும் வகையில் பூங்கா நிர்வாகம் இந்த கண்ணாடி மாளிகைகளை மூடியுள்ளன. சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால், இந்த கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கள்ளிச்செடிகள் மற்றும் பெரணி செடிகளை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
எனவே, தோட்டக்கலைத்துறையினர் இவ்விரு கண்ணாடி மாளிகையையும் சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக கண்ணாடி மாளிகை அமைத்து அதில் பெரணி செடிகள் மற்றும் கள்ளி செடிகள் வைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.