புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாடு திரும்பிய கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்நிலையில், அவருக்கு கிளாட்-1பி வகை குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருப்பதை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த 2022ல் ஆப்ரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவக் காரணமானது கிளாட்-1பி வகை குரங்கம்மை வைரஸ். இதற்கு முன் இந்தியாவில் 30 பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் கிளாட்-2 வகை வைரஸ் தொற்று இருந்தது. தற்போது வீரியமிக்க கிளாட்-1பி வகை வைரஸ் முதல் முறையாக இந்தியாவில் உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.