திருமலை: திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெலங்கானா பக்தர் வீடியோ வெளியிட்டதால் மீண்டும் அதிர்ச்சியும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் ரூரல் மண்டலம் கொல்லகுடேம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. இவர் கடந்த 19ம் தேதி தனது உறவினர்களுடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு லட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்றார். வீட்டிற்கு சென்றதும் உறவினர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக லட்டை எடுத்து உடைத்து உள்ளார். அப்போது பிரசாதத்தில் புகையிலை குட்கா பாக்கெட் கவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதை உடனே வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் பத்மா கூறியதாவது: திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். புனிதமான ஏழுமலையான் கோயிலில் இவ்வாறு இருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.