சென்னை: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று வௌியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பரவலாகப்பட்ட வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு இன்று மற்றுமொரு பொன்நாள். குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மக்களுக்கு அற்புதமான நாள். தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் மினிடைடல் பூங்காக்களை தொடங்கி, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை இந்த நகரங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார் முதல்வர். முதல்வரின் வழிகாட்டுதலின்படி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, இத்திட்டத்தை 15 மாதங்களிலேயே நிறைவு செய்துள்ளது. டைடல் பார்க்குகளின் தேவை மிகுந்திருப்பதால், முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று, விரைவில் 2ம் கட்டப் பணிகளை தொடங்கும் வாய்ப்புள்ளது.
சேலம் போன்ற 2ம் கட்ட நகரங்களுக்கு அதிக தகவல் தொழில்நுட்ப தொழில் உள்கட்டமைப்பை கொண்டுவர வேண்டும் என்பது முதல்வரின் கனவு. இப்போது Salem TidelNeo மூலம் நனவாகியுள்ளது. மேலும், விரைவில் வரவிருக்கும் டெக்ஸ் பார்க் சேலம், நெசவுத் துறையில் பெரிய அளவில் ஊக்கமளிக்கும். இந்த மினி டைடல் பூங்காக்கள், புதிய பகுதிகளிலும் 2 மற்றும் 3ம் கட்ட நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சான்றாகும். இதனால் நம் மாநிலத்தின் திறமை மிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்த ஊர்களிலேயே தொடர முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.