Monday, September 23, 2024
Home » மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 2 நுழைவாயில்களையும் இடிக்க ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!!

மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 2 நுழைவாயில்களையும் இடிக்க ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!!

by Lavanya

மதுரை: மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 2 நுழைவாயில்களையும் இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பி.பி குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் சைனத் பிபி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார் . மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவு வாயில் என்னும் பெயரில் பழமையான அலங்கார வளைவு உள்ளது. அதுமட்டுமின்றி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் பெரியார் அலங்கார வளைவு என்னும் பெயரில் பழமையான வளைவு உள்ளது. இந்த 2 நுழைவு வாயில்களும் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது.

இதனால் விபத்துகள் அதிகம் நிகழ்கிறது. இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் போன்றவை முந்தி செல்ல அலங்கார வளைவின் ஓரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஏராளமான விபத்துகள் நிகழ்கிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே இதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே, இதற்கு உடனே உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சுப்பிரமணியம், சுந்தர மோகன் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில் நுழைவு வாயில்களை அப்புறப்படுத்துவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுரை நகர் பகுதியில் உலக சென்னை மாநாடு நடத்தப்பட்டதன் நினைவாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.

இதே போல கே.கே நகர் பகுதியில் பெரியார் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த அலங்கார நுழைவு வாயில்கள் கட்டப்பட்டது. தற்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் மற்றும் விபத்துகள் அதிகமாகிறது, சாலைகள் அகலப்படுத்தப்பட்டு விட்டன. இதனால் இந்த இரு நுழைவு வாயிலின் தூண்களும் போக்குவரத்துக்கு இடையூறாக சிலையின் நடுவே அமைந்துள்ளது. இத்தகைய தூண்களை பலர் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் நுழைவு வாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை.6 மாதங்களுக்கு உள்ளாக இரு நுழைவு வாயில்களையும் அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நுழைவு வாயில்களை அமைத்து கொள்ளலாம் என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

You may also like

Leave a Comment

four − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi