திருப்பதி : திருப்பதியில் மாணவர்களை குறிவைத்து மளிகை கடையில் கஞ்சா சாக்லெட் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஆன்மீக நகரமான திருப்பதி முழுவதும் எஸ்பி சுப்பாராயுடு தலைமையில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, திருப்பதியில் உள்ள கடிகாரங்கடி பகுதியில் உள்ள மளிகை கடையில் கஞ்சா சாக்லெட் விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தியதில் அங்கு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.86,355 மதிப்புள்ள 3,200 கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதனை பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்றது தெரிந்தது. இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் பவர் லால் துளசீராம்(42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.