* ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. மொத்தம் 193 அணிகள் பங்கேற்ற ஓபன் பிரிவில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணிகள் வெற்றிகளைக் குவித்து முன்னிலை வகித்தன.
* ஆண்கள் பிரிவு இறுதிச் சுற்றில் ஸ்லோவேனியாவை நேற்று எதிர்கொண்ட டி.குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி டிரா செய்தது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா ஓபன் பிரிவில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு அசத்தியது. சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாடில் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது.
* மகளிர் பிரிவு கடைசி ரவுண்டில் திவ்யா தேஷ்முக், ஹரிகா, வந்திகா அகர்வால், வைஷாலி, தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி அஜர்பைஜானை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
* வாழ்த்து மழை: செஸ் ஒலிம்பியாடில் 2 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய அணி வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.