திருமலை: ஆந்திர துணை முதல்வரான ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஏழுமலையானே என்னை மன்னிக்கவும். புனிதமாக கருதப்படும் உனது பிரசாத லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட நிலையில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்கிறேன். கடந்த ஆட்சியாளர்களின் கேடுகெட்ட மனப்போக்கால் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள் மட்டுமே இத்தகைய பாவத்தை செய்யமுடியும். இப்பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனது இந்து இனத்தின் மீதான கறை.
கலியுகத்தின் கடவுளான ஏழுமலையானுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பரிகாரம் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதியாக விரதம் மேற்கொண்டு ஏழுமலையானை வழிபாடு செய்ய உள்ளேன்.
லட்டு பிரசாதம் தயாரிப்பில் விலங்கு கொழுப்பு அடங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்மத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் குண்டூர் நம்பூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு துணை முதல்வர் பவன்கல்யாண் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது விரதத்தை தொடங்கினார். தொடர்ந்து 11 நாட்கள் காலை, மாலை ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்து வழிபட உள்ளார்.