Sunday, September 22, 2024
Home » தமிழன் பிரதமராக நாட்டை தயார்படுத்த வேண்டும்: பொதுக்குழுவில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

தமிழன் பிரதமராக நாட்டை தயார்படுத்த வேண்டும்: பொதுக்குழுவில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

by Mahaprabhu

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். மநீம துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: முழு நேர அரசியல்வாதியாக மாறி உங்கள் குடும்பங்களை தெருவில் விட்டுவிட வேண்டாம். . நாம் உணவுக்காக கூடிய காக்கை கூட்டமாக இருக்கக் கூடாது. எனக்கு மிகப்பெரிய இடைஞ்சல்கள் கொடுத்தவர்கள் எல்லாம் நான் பார்த்து வளர்ந்துள்ளேன். நம்முடைய பணம் அங்கு இருக்கிறது. அதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

அங்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு இங்கு கிள்ளிக் கொடுக்கிறார்கள். அங்கு கர்ணனாகவும், இங்கு கும்பகர்ணனாகவும் இருக்கிறீர்கள். அங்கு ராக்கெட் விட்ட நாம் இங்கு ஒரு துரும்பை கூட விட முடியவில்லை. ஒரு தமிழன் பிரதமராக ஆக முடியுமா? அதற்கு நாம் தயாராக வேண்டும். நாட்டை தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஆய்வுகள் செய்து அறிக்கை மற்றும் பரிந்துரைகளை மாநில, மத்திய அரசுக்கு சமர்ப்பித்தல், சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது, ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சிக்கு வன்மையான கண்டனம், இன்றைய கால மாற்றத்தையும், கல்வி வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு, இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும், அரசின் நலத்திட்டங்கள் நலிவடைந்த மக்களை நேரடியாகச் சென்று அடையும்படி `அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

18 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi