புதுடெல்லி: இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக மாதபி புச் எப்போது நியமிக்கப்பட்டார், எப்போது அந்த பதவிக்கு விண்ணப்பித்தார், பதவியேற்கும் போது அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து குறித்து அரசுக்கும், செபிக்கும் தெரிவித்த உறுதிமொழி விவரங்கள், தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக மாதபி புச் விலகிக் கொண்ட வழக்குகள் விவரம் ஆகியவற்றை வழங்குமாறு ஆர்டிஐ ஆர்வலர் கொமடோர் லோலேஷ் பாத்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.
ஆனால் இந்த தகவல்களை தர மறுத்த செபி, இவை தனிப்பட்ட விஷயங்கள் என்று பதிலளித்தது.இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘செபி தலைவர் குறித்த பல முரண்பாடுகள் இதுவரை வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இப்போது இந்த நடவடிக்கை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தகவல்களை வெளியிடாமல் மறைத்து பொது பொறுப்பு கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை செபி கேலிக்கூத்தாக்குகிறது’’ என கூறி உள்ளார்.