சென்னை: காங்கிரஸ் கட்சியில் விரைவில் பெண்களுக்கு மாவட்ட தலைவர் பதவியும், நிர்வாகிகள் பதவியில் 35% வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித்துறை சார்பில் ‘மகளிர் சவால்கள் மற்றும் அதிகார மேம்படுத்துதல்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை மாநில தலைவர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து ெகாண்டு, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
கருத்தரங்கில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தற்போது ஒரு பெண் மாவட்ட தலைவர் கூட காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற குறைபாடு இருக்கிறது. இதை போக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் 35% பெண்களுக்கு மாநில நிர்வாகிகள் பதவி வழங்க திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்ல, விரைவில் பெண்களுக்கும் மாவட்ட தலைவர் பதவி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லா தளங்களிலும் பெண்களை உயர்த்துவதற்கு அரசியல் கட்சிகள் தான் முதலில் முன்வர வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இனி வரும் காலங்களில் அதிக அளவு பெண்கள் தான் நிர்வாகிகளாக வலம் வரப் போகிறார்கள். அவர்கள் தான் முன்வரிசையில் அமர போகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.