சென்னை: சென்னை அண்ணா் பல்கலைக் கழகம், முதன்முறையாக லடாக்கில் டிரோன் பயிற்சி மையத்தை 2 மாதத்தில் அமைக்க உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இயங்கி வரும் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம், நவீனதொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை வடிவமைத்து கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக அனுப்பி வைத்தது. சமூகம் சார்ந்த பல்வேறு செயல்களை செய்து வரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் டிரோன் முதல்முறையாக உயர்ந்த மலைப்பகுதிகளான லே, லடாக்கில் தனது பயிற்சி மையத்தை அமைக்க உள்ளது. லே பகுதியில் இந்திய ராணுவத்திற்கான டிரோன்களின் பயன்பாடு குறித்த கண்காட்சி (ஹிமாலயன் டிரோன்) நடைபெற்றது.
இதில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் டிரோன் இடம்பெற்றிருந்தது. அண்ணா பல்கலைக் கழக ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை இயக்குநர் செந்தில் குமார் கூறுகையில், ‘‘17 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இப்பகுதிக்குள் வருவதற்கு மக்கள் அனைவரும் பயப்படுவார்கள். ஆக்சிஜன் குறைவு, மேலும், ராணுவத்தினரால் தீவிரமாக கண்காணிக்கப்படும் பகுதியும் கூட. இங்கு டிரோன்களின் தேவை அதிக அளவில் உள்ளது. அதனால் அதற்கான பயிற்சியும் அவசியமாகியுள்ளது. இந்த கண்காட்சியில் லடாக் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் லடாக் பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் பேசியுள்ளோம். அண்ணா பல்கலைக் கழகத்தின் டிரோன் பயிற்சி மையத்தை இங்கு அமைக்க ஆர்வமாக உள்ளனர். பயிற்சி மையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக லடாக் பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை வந்ததும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு 2 மாதத்தில் இங்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்’’ என்றார்.