மதுராந்தகம்: கொளத்தூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ய பெண்களை அழைத்து வந்து, அதிமுகவின் இணைக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த அதிமுக கட்சியினர் தேசிய ஊரக வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அப்பகுதி பெண்களை திரட்டினர்.இந்நிலையில், திடீரென அங்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் விண்ணப்பத்தை வழங்கி உறுப்பினர் சேர்த்தனர்.
மேலும், உறுப்பினர் அட்டை வழங்கினர். இதனைக்கண்ட பெண்கள் தேசிய ஊரக வேலை குறித்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக கூறிவிட்டு உறுப்பினர்களை சேர்க்கிறீர்கள் என மாவட்டச் செயலாளர் ஆறுமுகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அதிமுகவினர் பொதுமக்களை சமாதானம் செய்து சிறிது நேரம் தேசிய ஊரக வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அருகில் உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக அதிமுக கலைந்து சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் தேசிய ஊரக வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.