புழல்: புழல் அருகே மகன்களை தாக்கியதை தட்டிக்கேட்க சென்ற தந்தையையும் தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். புழல் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(32). ஆந்திரா மாநிலத்தில் எல்எல்பி படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த புழல் தியாகி சின்னசாமி தெருவை சேர்ந்த அசோக் குமார்(38) என்பவரின் மகன்களிடம், பைக்கில் இருந்து மதுபாட்டலை எடுத்து கடையில் வைக்குமாறு ராஜ்குமார் தெரிவித்தார். அதற்கு, சிறுவர்களும் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ராஜ்குமார் இருவரையும் அடித்து உதைத்து ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவர்கள், தனது தந்தை அசோக்குமாரிடம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்து சம்பவ இடத்திற்கு சென்ற அசோக்குமார், ராஜகுமாரிடம் மகன்களை ஏன் மதுபாட்டில்களை எடுத்து வைக்கச்சொல்லி அடித்ததாய் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ராஜ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து, அசோக்குமார் தலையில் தாக்கினார். சத்தம்கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த அசோக்குமாரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், வழக்குபதிவு செய்த போலீசார், ராஜகுமாரை கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.