திருத்துறைப்பூண்டி, செப். 21: திருத்துறைப்பூண்டி அருகே மார்க்ஸிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சி 8வது வார்டு கடியச்சேரி மெயின் ரோடு காவேரி நகர் பகுதியில் சாலை கடந்த 2021ல் தொடங்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்தும் இதுவரை சாலை பணி நிறைவு பெறாததை கண்டித்து உடனடியாக சாலை போட்டு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்கள் ஏராளமானோர் பள்ளங்கோவில் பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாநிலகுழு உறுப்பினர், நாகராஜன், மாவட்ட செயற்குழு ஜோதிபாசு, மாவட்டக்குழு சுப்பிரமணியன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் தகவலறிந்து திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் மாரிமுத்து, மண்டல துணை வட்டாட்சியர் ஜோதிபாசு,, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன், ஊராட்சி செயலாளர் சரஸ்வதி சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.