பாலக்கோடு, செப்.21: பாலக்கோடு தாலுகா, வாழைத்தோட்டம் கிராமம், ஜோடிசுனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தினமும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் நாய், கோழிகளை குறிவைத்து வேட்டையாடி வருவதாகவும், விநாயகம் என்பவரின் வீட்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கோழிகளையும், 4 நாய்களையும் கடந்த 2 மாதத்தில் வேட்டையாடி உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் வளர்த்து வந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது. மேலும் மாது என்பவரின் வீட்டில் வளர்த்து வந்த 3 நாய்களையும், 15க்கும் மேற்பட்ட கோழிகளையும் வேட்டையாடி உள்ளது. இந்த வழியாக குழந்தைகள் தினமும் பள்ளிக்கு சென்று வருவதால், உயிர் பலி ஏற்படுவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வாழைத்தோட்டம், ஜோடிசுனை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.