மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்துறை சார்பு ஆய்வாளர் கோவில் திருவிழாவை நடத்தவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டி கிராமமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருமங்கலத்தை அடுத்த மேல உரப்பனூர் கிராமத்தில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் ஆண்டு தோறும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு முதல் மரியாதை கொடுக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு ரமேஷ் என்பவரை கிராமமக்கள் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் காவல்துறை சார்பு ஆய்வாளர் சிவனேசன் தனக்குத்தான் முதல் மரியாதை தரவேண்டும் என்றும் இல்லையெனில் திருவிழாவை நடத்த முடியாது என்றும் மிரட்டுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை அடுத்து மேல உரப்பனூர் கிராம மக்கள் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவிழாவை நடத்துவது தொடர்பாக கிராமமக்களிடம் வட்டாட்சியர் மகேஷ்குமார் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது முதன்மை மரியாதை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எவருக்கும் மரியாதை வழங்க கூடாது என்று உத்தரவிட்டார். இதை ஏற்று கொண்டு கிராமமக்கள் களைந்து சென்றனர்.