பெரம்பூர்: வடசென்னையை ஆட்டிப்படைத்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி (48) நேற்று முன்தினம் வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு அருகே இன்ஸ்பெக்டர் சரவணனால் என்கவுன்டர் செய்யப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அங்கு, காக்காதோப்பு பாலாஜியின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மதியம் காக்கா தோப்பு பாலாஜியின் தம்பி மணிகண்டன் வீடு உள்ள கோயம்பேட்டிற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர், நேற்று மாலை மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. காக்காதோப்பு பாலாஜியுடன் காரில் கஞ்சாவை கொண்டு வந்து போலீசில் சிக்கிய ஓட்டேரி, பழைய வாழை மாநகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (55) என்வர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘காக்காதோப்பு பாலாஜியுடன் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா வந்தேன். அதை விற்று பணம் தரும்படி காக்காதோப்பு பாலாஜி கூறினார், என தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்ற எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.