சென்னை: கொலை முயற்சி வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த வாலிபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (27). இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு ஒன்று கடலாடி காவல்நிலையத்தில் பதிவானது. இதையடுத்து கடலாடி போலீசார், மாரிமுத்துவிடம் விசாரணை நடத்த தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தன்னை தேடுகிறார்கள் என்பதை அறிந்து, மாரிமுத்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று, தலைமறைவாகிவிட்டார்.
தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாரிமுத்துவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அந்த விமானத்தில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாரிமுத்துவும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது அவர் கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து மாரிமுத்துவை வெளியில் விடாமல், குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்து காவலில் வைத்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, கடலாடி காவல் நிலைய தனிப்படை போலீசார், மாரிமுத்துவை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர்.