மதுரை: நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாட்டுத்தாவணியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் இடையீட்டு மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விரும்பினால் சாலையில் இருபுறம் உள்ள நிலங்களை வாங்கி அரசுக்கு தந்து நுழைவாயிலை பாதுகாக்கலாம். அரசுக்கு ஒப்படைத்து நுழைவாயிலை பாதுகாத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கலாமே என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.