பாட்னா: பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் தலித்துகளான ரவிதாஸ், மாஞ்ஜி மற்றும் பஸ்வான் ஜாதிகள் கணிசமாக வசிக்கின்றனர். இந்நிலையில், நிலத்தகராறு சம்பந்தமாக வீடுகளை காலி செய்யுங்கள் என்று ரவிதாஸ், மாஞ்ஜி ஜாதியினரை பஸ்வான் ஜாதியினர் மிரட்டியுள்ளனர். அவர்கள், வீடுகளை காலி செய்ய மறுத்துள்ளனர். இதனால் பஸ்வான் ஜாதியினர் ஆத்திரத்துடன் ரவிதாஸ், மாஞ்ஜி ஜாதியினரின் 80 குடிசைகள் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கு புகுந்து தீ வைத்து எரித்தனர். வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
இந்த சம்பவத்தில் 21 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. காயமடைந்தவர்கள் அதே பகுதியில் உள்ள மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் நவாடா மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் உரிய விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் பஸ்வான் ஜாதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள்தான் ரவிதாஸ், மாஞ்ஜி ஜாதியினரின் குடிசைகளை தீ வைத்து எரித்ததாக விசாரணையில் தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.