காரைக்குடி, செப். 19: காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலை உள்ளது. இச்சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இரும்பு வேலியில் வேல் மற்றும் அலங்கார கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மர்மநபர் ஒருவர் வேலியில் உள்ள பூட்டு மற்றும் வேல்கம்பிககளை பெரிய கல்லை வைத்து உடைத்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர், அவரை தடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலையில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிலையை சுற்றி கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவிர தேவர் சிலை பகுதியில் போலீசார் ஒருவர் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுவார் என ஏஎஸ்பி உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.