தொண்டாமுத்தூர்,செப்.19: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை பூர்வீகமாகக் கொண்டவர் கார்த்திகேயன் (55). டிரைவர். கடந்த 50 ஆண்டுக்கு முன்பு இவரது பெற்றோர் மலேசியா நாட்டில் குடியேறினர். கார்த்திகேயன் மனைவி மஞ்சு என்ற வேல்விழி (51) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது 2 சகோதரர்கள், அண்ணிகளுடன் கோவைக்கு ஆன்மீக சுற்றுலா வந்தார். ஆலந்துறையில் உள்ள தனியார் லாட்ஜில் அவர்கள் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வேல்விழிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. வேல்விழி கொழுப்பு அறுவை சிகிச்சை கொண்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, மருந்து சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆலாந்துறை போலீசில் வேல்விழியின் சகோதரர் கணேசன் (62) இறப்பு குறித்து பரிசோதனை செய்ய புகார் செய்தார். இதையடுத்து வேல்விழியின் சடலத்தை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆலாந்துறை போலீசார் அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்து வேல்விழியின் உடல் பதப்படுத்தப்பட்டு, மலேசிய விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.