Friday, September 20, 2024
Home » பெண்களுக்கு தனிப்பட்ட வங்கிக் கணக்கு அவசியமா?!

பெண்களுக்கு தனிப்பட்ட வங்கிக் கணக்கு அவசியமா?!

by Porselvi

நம் நாட்டில் பெரும்பாலான பெண்கள், தங்களுக்கான தனியாக வங்கிக் கணக்கோ, பண சேமிப்பு கணக்கோ வைத்துக் கொள்வதில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் நூற்றுக்கு 60 சதவிகித பெண்கள் சேமிப்பு கணக்கு வைத்திருப்பதில்லை என்பது தெரிய வந்துள்ளது. 20 சதவிகிதம் பெண்களின் சேமிப்புக் கணக்கை அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சில பெண்கள், குடும்பத்தினருக்காக கடன் உதவி மற்றும் மானியம் பெறுவதற்காக மட்டும் வங்கிக் கணக்கை பயன்படுத்துகின்றனர். 20 சதவிகிதம் பேர் குடும்ப உறுப்பினர் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்த சேமிப்புக் கணக்கை மட்டு மே வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
தன்னுடைய கட்டுப்பாட்டிலோ, தனது மேற்பார்வையிலோ அல்லது சுய பயன்பாட்டுக்காகவோ, தனியாக வங்கிக் கணக்கை பல இல்லத்தரசிகள் பயன்படுத்துவதில்லை.

சுயமாக சம்பாதிக்கும் பல பெண்கள், தங்களுடைய வங்கிக் கணக்கையும், ஏடிஎம் அட்டைகளையும் குடும்பத்தார் வசம் ஒப்படைத்து விடுகின்றனர்.ஒவ்வொரு இல்லத்தரசியும் குறைந்த பட்சம் 3 வங்கிக் கணக்குகளை வைத்திருக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

முதல் கணக்கு: வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான ‘ஜாயின்ட் வங்கிக்கணக்கு’. இதில் செலுத்தும் பணத்தை உணவு மற்றும் வீட்டின் வாடகை அல்லது பராமரிப்பு செலவு, மின் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம் போன்ற வாழ்வியல் அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவது கணக்கு: குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான சேமிப்புக் கணக்கு. இந்த வங்கிக் கணக்கை சேமிப்பிற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, கடன் தவணை, வீடு அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குதல், பயணம், குழந்தைகளுக்கான திருமண செலவு போன்ற எதிர்கால தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்த கணக்கில் தினசரி பணப் பரிவர்த்தனையை நிகழ்த்தக் கூடாது.

மூன்றாவது கணக்கு: தனிநபர்களுக்கு உங்களுடைய பயன்பாட்டுக்கு மட்டும் இந்த வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டும். இந்த வங்கிக் கணக்கை குழந்தைகள், வாழ்க்கை துணை, பெற்றோர்கள் என எவரின் கட்டுப்பாட்டின் கீழும் மேற்பார்வையிலும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டும் சேமிக்கப்படும் வங்கிக் கணக்காக இதை பயன்படுத்தலாம். உங்களுடைய எதிர்கால திட்டங்களுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற தனி நபர் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மற்றவர்கள் உங்களை கட்டாயப்படுத்துவது, நம்பிக்கையின்மையை பிரதிபலிப்பதாகும். இன்றைய காலக்கட்டத்துக்கு நிதி சார்ந்த நடவடிக்கைகளில் இது போன்ற மாற்றங்கள் அவசியமானவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்குதுவங்கும் முன்

ஆரம்பிக்கும் பொழுதே மினிமம் பேலன்ஸ் என்னும் எப்போதுமான பணம் வங்கியில் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இல்லாத கணக்கா என விசாரித்து பயன்படுத்தவும். இல்லையேல் மினிமம் பேலன்ஸ் என்னும் பெயரிலேயே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை வங்கிகள் பிடித்துக்கொள்ளும். உங்கள் கணக்குகள் எப்போது வேண்டுமானாலும் தொழில் சார்ந்த கணக்காக மாற்றிக்கொள்ளும் விதமாக வங்கிகளைத் தேர்வு செய்வதும் அவசியம். காரணம் எதிர்காலத்தில் ஒருவேளை சுயதொழில் துவங்கும் எண்ணம் இருந்தால் கூட இந்த வங்கிக் கணக்குகள் உதவும். ஏதேனும் ஒரு தொகையை மாதம் தோறும் உங்கள் கணக்கில் வரவு வையுங்கள். உங்களுக்கான அங்கீகாரங்களும் அதிகமாகும்.
– அ.ப. ஜெயபால்.

You may also like

Leave a Comment

eleven + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi