பெரம்பூர்: இதுபோன்ற பெண்கள் இருக்கும்வரை மரணங்கள் நடைபெறும் என்று கடிதம் எழுதிவைத்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துள்ளார். சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் பிளம்பர். இவரது மகன் பவித்ரன்(21). இவர் வியாசர்பாடியில் உள்ள கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்தார். இவரது மகள் கோகிலா, அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக உணவு டெலிவரி வேலை பார்த்தார் பவித்ரன். கடந்த 11ம் தேதி கொரட்டூர் ஏவிஎஸ் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் பெண் ஒருவருக்கு உணவு டெலிவரி கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்மணி குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததால் தேடி பார்த்துவிட்டு அந்த பெண்ணை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’தற்போது நீ எங்கள் வீட்டின் பின்புறத்தில் இருக்கிறாய், முன்பக்கம் வந்து உணவு கொடுக்கவேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார். அதற்கு பவித்ரன், ‘’நீங்கள் அனுப்பிய லோக்கேசனில்தான் நிற்கின்றேன். இங்கு வந்து உணவை வாங்கி செல்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பெண் வந்து, ஊழியர் பவித்ரனை தகாதவார்த்தையால் திட்டியதுடன் அவர் பணியாற்றும் உணவு டெலிவரி நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார்.
இதனால் பவித்ரனின் வேலை பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பவித்ரன் கடந்த 13ம் தேதி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு வந்துள்ளார். 15ம்தேதி வெளியூரில் இருந்து வந்திருந்த கணவரிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து பவித்ரனை விசாரணைக்கு அழைத்துசென்றதுடன் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் மாணவர் என்பதால் அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். இதன்காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
கொளத்தூர் போலீசார் சென்று பவித்ரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘’உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் ஒரு பெண் என்னை கடும் வார்த்தையால் திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்தேன். இதுபோன்ற பெண்கள் உலகில் இருக்கும்வரை பல மரணங்கள் நிகழும்’’ என்று எழுதிவைத்துள்ளார்.