அரியலூர், செப். 18: அரியலூர் அடுத்த இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பசுமைப் படை சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயராணி தலைமை வகித்து, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் ஓசோன் படலத்தை பாதுகாக்கும் முன்வரவேண்டும். அதற்கு அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும்.
நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, அவர் மரக்கன்றுகளை நட்டுவைத்து, விழிப்புணர்வுப் பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் கிராமங்களின் முக்கிய தெருக்களின் வழியாக ஓசோன் படலம் குறித்து முழக்கமிட்ட வாறு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளைஆசிரியர்கள் மாயூபி, தீபக், மதியழகன், ஜான் பிரிட்டோ, அனிதா ஆகியோர் செய்திருந்தனர்.