கடலூர்: கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்து வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாநகராட்சி 45 வார்டு பகுதிகளை கொண்டது. இதில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே கடலூர் மஞ்சக்குப்பம் பகுதிக்குட்பட்ட வண்ணார பளையம், அண்ணா நகர், புதுப்பாளையம் உள்ளிட்ட 5 வார்டுக்குட்பட்ட இடங்களில் பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்தது.
புகாரைத் தொடர்ந்து மேயர் சுந்தரி ராஜா உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி ஆய்வு செய்தார். இதில் வண்ணாரபாளையம் பகுதியில் பிரதான சாலையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு மஞ்சக்குப்பத்தில் பல்வேறு வார்டு பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து உடனடியாக புதிய குழாய் அமைத்து கழிவுநீர் சாலைகளில் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கையை மேயர் சுந்தரி ராஜா துரிதப்படுத்தினார். ஆய்வின் போது மாநகராட்சி ஊழியர்கள் மாணவரணி பாலாஜி ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.