டெல்லி: அடுத்த உத்தரவு இல்லாமல் நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் இடிப்புகள் எதுவும் செய்யக்கூடாது. இருப்பினும், பொதுத் தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள் அல்லது பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அத்தகைய உத்தரவு பொருந்தாது” என்று நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டு தலங்களை மட்டும் இடிப்பது ஏன் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
புல்டோசர் இடிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஒய்.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “புல்டோசர் இடிப்பு நாள்தோறும் தொடர்கிறது. ஒரு மத ஊர்வலம் நடந்தால் அங்கு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகிறது. மறுநாள் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன” என தெரிவித்தார்.
அதற்கு ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மட்டுமே நோட்டீஸ் அனுப்பி இடிக்கப்படிகின்றன” என பதிலளித்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு உடனடியாக இடிப்பதை ஏற்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகளை, கட்டடங்களை மட்டும் குறிவைத்து புல்டோசர் மூலம் இடிப்பது என்பது அரசியல் அமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது” என கண்டனம் தெரிவித்தனர். அக்.1-ம் தேதி வரை வீடுகள்,வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.