இலங்கை: பொருளாதார நெருக்கடி, தொடர் போராட்டங்களால் முடங்கி இருந்த இலங்கை சுற்றுலாத்துறை படிப்படியாக மீண்டு வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இயற்கை வளங்கள் நிறைந்த இலங்கை பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு நடந்த ஆட்சி மாற்றம் அதன் பிறகான மாணவர்கள் போராட்டங்கள் உள்ளிட்டவற்றால் அந்நாட்டு சுற்றுலாத்துறை முடங்கியது.
மேலும், பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சென்றது. சில மாதங்களாக அங்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில், சுற்றுலாத் துறையும் படிப்படியாக மீண்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய அந்த நாட்டை பிரதானமாக கொண்டு செயல்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு நட்டல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரோனா மற்றும் போராட்டங்கள் பிறகு கடந்த ஆண்டு சுமார் 14 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்ததாக அந்த நாட்டு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் மனோகரன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு இதுவரை 13 லட்சம் பேர் சுற்றுலா வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பியா நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா வர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத் துறை மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டின் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.