சென்னை: சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் அருகே சாலை தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடிய அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கி 104 என்ற எண் கொண்ட அரசு பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
வானகரம், ஓடமா நகர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு வேகமாக பாலத்தின் மேல் இருந்து பள்ளத்தில் இறங்கியது. தொடர்ந்து சர்வீஸ் சாலையில் ஓடிய பேருந்து, எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த மாதவரத்தை சேர்ந்த தினேஷ், உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், பேருந்தில் பயணித்த சுமார் 30 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் ஓட்டுநர் ஆரோக்கியராஜை போலீஸ் கைது செய்துள்ளது.