குஜராத்: அயோத்தி உள்பட 16 நகரங்கள் மாதிரி சோலார் சிட்டியாக உருவாக்க பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலகாந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பேசியபோது, 2047க்குள் வளர்ந்த நாடாவதற்கு ஆற்றல் தேவையை இந்தியா அறியும் என்றார். எங்களிடம் சொந்தமாக எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு இல்லை.
எனவே சூரிய காற்று அணு மற்றும் நீர் சக்திகளில் எதிர்கால தேவையை சார்ந்திருப்பதாக குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக புதிய கொள்கைகளை உருவாக்கி ஒவ்வொரு வழியிலும் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். வீடுகளில் மின் உற்பத்திக்கு 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி அயோத்தி உள்பட 16 நகரங்களை மாதிரி சோலார் சிட்டியாக உருவாக்க பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.