சென்னை: உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் இறந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன் கடந்த ஏப்ரல்.23ஆம் தேதி எடை குறைப்பு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மறுநாளே மரணடைந்தார். இதனை அடுத்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர், அளித்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
இத்தகைய உத்தரவை எதிர்த்த வழக்கில் மருத்துவமனை செயல்பட அனுமதி அளித்து கடந்த மே மாதம் நீதிபதி சுவாமிநாதன் ஆணை பிறப்பித்தார். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது . இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தனியார் மருத்துவமனைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.