திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனின் நினைவாக ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னனின் காலத்தில் கேரள மாநிலம் வளமையுடன் இருந்ததாக அறியப்படுகிறது. மகாபலி மன்னனை நினைவு கூறும் வகையில் இந்தப் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் நாளில் மகாபலி மன்னன் தன்னுடைய மக்களை காண வருவதாக நம்பப்படுகிறது.
அப்போது அவரை வரவேற்பதற்காக அனைத்து வீடுகளிலும் பூக்கோலம் இடுவார்கள். இந்த வருட ஓணம் பண்டிகை கேரளாவில் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் காலையிலேயே புத்தாடை அணிந்து அருகிலுள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை, குருவாயூர் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது. சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் அரசு சார்பில் இந்த வருடம் ஓணம் விழா கொண்டாடப்பட வில்லை. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மலையாளிகளும், வெளிநாடுகளில் உள்ளவர்களும் ஓணம் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.