அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் 9 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருக்கும் ராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் துப்புரவுப் பணியாளராக 20 வயது இளம்பெண் பணியாற்றி வந்தார். அவர் அங்குள்ள கல்லூரியில் பிஏ இறுதியாண்டு படித்து வருகிறார். அவருக்கும்,அங்குள்ள இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. தனது காதலனை சந்திப்பதற்காக சென்ற போது, காதலனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களை செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, அந்தப் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்தப் பெண்ணை தாக்கி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அதை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டி ஆக.15 முதல் 26 வரை அவரை பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக அயோத்தி போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்கும் 13 வினாடிகளின் வீடியோவை அவர் வெளியிட்டார். இதை தொடர்ந்து வான்ஷ், வினய், ஷாரிக், ஷிவா, உதித் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 127(2) (தவறான சிறைவைப்பு), 75 (பாலியல் துன்புறுத்தல்), 70(1) (கும்பல் பலாத்காரம்) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.