புதுச்சேரி, செப். 14: புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சிக்கு சப்-கலெக்டர் (வடக்கு) அர்ஜூன் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், நேற்று முன்தினம் இந்திரா காந்தி சிக்னலில் இருந்து நெல்லித்தோப்பு சுப்பையா சதுக்கம் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து, 2வது நாளாக நேற்று நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையின் கட்டிடம் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் பார்த்திபன், புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
புவன்கரே வீதியில் உள்ள தற்காலிக மீன் மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது, காலஅவகாசம் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற சில கடைகளின் உரிமையாளர்கள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி தாசில்தார் பிருத்வி மற்றும் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தொலைபேசி மூலம் சப்-கலெக்டர் (வடக்கு) அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் பேசினர். இதையடுத்து, அவர் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையேற்று அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.