சேலம்: அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒன்றிய அரசின் கொள்கைகளை ஏற்காவிட்டால் மாநிலங்களுக்கு நிதி தரமாட்டேன் என்று கூறுவது அபத்தமானது. ஒன்றிய நிதியமைச்சரை பொறுத்தவரை பிற மாநிலங்கள் எப்படி கஷ்டப்பட்டு அவர்களுக்கு நிதி கொடுக்கிறார்கள் என உணருவது இல்லை. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு போடுவது மட்டுமே அவர்களது வேலையாக உள்ளது. மாநிலத்தில் இருந்து கோடிக்கணக்கான நிதியை ஈட்டி தருகிறார்கள்.
உதாரணமாக கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தினமும் ₹1 கோடி வருவாய் என்றளவில் வருடத்திற்கு ₹365 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. இது ஒன்றிய அரசுக்கு தான் செல்கிறது. இந்த தொகைக்கான ஜிஎஸ்டியை கூட செலுத்தாமல் அவர்கள் எடுத்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை வேறு உயர்த்தி இருக்கிறார்கள். இதுபோல பல வழிகளில் ஒன்றிய அரசு மாநில அரசிடம் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு இங்குள்ள திட்டங்களுக்கான நிதியை ஒதுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.