Friday, September 20, 2024
Home » வீட்டிலேயே தயாரிக்கலாம் சிறுதானிய மாவு!

வீட்டிலேயே தயாரிக்கலாம் சிறுதானிய மாவு!

by Porselvi

நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயநோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தூக்கத்தை சீராக்கும். அதிகப்படியான உடல் எடையையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளை குணப்படுத்தும்.பல்வேறு சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்த சத்துமாவு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இல்லத்தரசிகள் இந்த சிறு தானிய சத்து மாவு தயாரிப்பை சுயதொழிலாகவும் செய்ய முடியும். எவ்விதமான பதப்படுத்தும் பொருட்களும் சேர்க்காமல் தயாரிப்பதால், சிறு தானிய சத்து மாவுக்கு வரவேற்பும் நன்றாகவே இருக்கும். பெரிய அளவில் முதலீடுகள் இதற்குத் தேவையில்லை. முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நோக்கில் தயாரித்து விற்பனை செய்யலாம். இது பற்றிய தகவல்களைக் காண்போம்.

சிறு தானிய சத்து மாவு தயாரிக்க

தேவையான பொருட்கள்:பிசினி அரிசி, மூங்கில் அரிசி, கறுப்புக் கவுனி அரிசி, மாப்பிள்ளைச் சம்பா அரிசி, சிவப்பு அரிசி, முழுகோதுமை, வெள்ளைச் சோளம், ராகி, கொள்ளு, குதிரைவாலி, வரகு, சாமை, தினை, கம்பு, பார்லி.

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று அல்லது நான்கு முறை கழுவிக் கொள்ளவும். பின்பு தண்ணீரை நன்றாக வடிய செய்து, சுத்தமான பருத்தித் துணியில் அவற்றைக் கொட்டி நிழலில் உலர்த்தவும். ஈரப்பதம் முழுவதுமாக நீங்கிய பிறகு, மாவு மில்லில் கொடுத்து மென்மையான மாவாகப் ெபாடித்துக் கொள்ளவும். மாவில் இருக்கும் சூடு முழுவதும் நீங்கும் வரை ஆற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும் இந்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி மிதமான தீயில் வறுக்கவும்.சுத்தமான பருத்தித் துணியில் அந்த மாவைக் கொட்டி மீண்டும் ஆறவைக்கவும். பின்னர் ஈரம் இல்லாத காற்றுப் புகாத, சுத்தமான சில்வர் அல்லது கண்ணாடி டப்பாக்களில் மாவை நிரப்பி பத்திரப்படுத்தவும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி வரலாம்.சிறுதானிய மாவைக் கஞ்சியாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதை தவிர்க்கவும். பள்ளி செல்லும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், முதியவர்கள் இதைச் சாப்பிடலாம். கஞ்சியாக, கொழுக்கட்டையாக, தோசையாக என இந்த மாவை பயன்படுத்தலாம். இந்த சத்து மாவில் புட்டு, இடியாப்பம் என பலவிதமான பலகாரங்களை தயாரித்தும் சாப்பிடலாம். வணிகமுறையில் சந்தைப்படுத்துவதற்கான சான்றிதழ்களைப் பெற்று தரமான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்தால் லாபமும் ஈட்டலாம்.
– அ.ப. ஜெயபால்

You may also like

Leave a Comment

seventeen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi