தேனி, செப். 13: தேனி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியின் 3ம் நாளான நேற்று நடந்த பள்ளி மாணவியர்களுக்கான குழுப்போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதலமைச்சர் கோப்பை-2024க்கான தேனி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 10ம் தேதி தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கியது. இப்போட்டிகள் வருகிற 24ம் தேதி வரை நடக்க உள்ளது. இதன்படி, நேற்று பள்ளி மாணவியர்களுக்கான குழுப்போட்டிகள் நடந்தது.
இதில் கூடைப்பந்து, மட்டைபந்து, கால்பந்து, கபடி, கையுந்துபந்து, கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். நேற்றைய போட்டியினை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், ஆயுதப்படை மைதான ஆய்வாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களில் சிறந்த வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.