திருப்போரூர், செப்.13: திருப்போரூர் – நெம்மேலி இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூரில் இருந்து நெம்மேலி வரையில் சுமார் 3 கிமீ தூர சாலையும், இதனிடையே செல்லும் பக்கிங்காம் கால்வாயில் பாலமும் உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் உள் கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, தெற்குப்பட்டு, வட நெம்மேலி, பேரூர், நெம்மேலி, சூளேரிக்காடு, புதிய கல்பாக்கம், கிருஷ்ணன்காரணை, பட்டிபுலம், சாலவான்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வேளாண் அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலகம், மின் வாரிய அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். அதேபோன்று திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், கொட்டமேடு, மயிலை, கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நெம்மேலியில் உள்ள அரசு கல்லூரிக்கும், கோவளம், நெம்மேலியில் உள்ள கடற்கரைக்கும் வாகனங்களில் சென்று செல்கின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு வாகனங்களும் இச்சாலையில்தான் சென்று வருகின்றனர்.இதன் காரணமாக, இந்த சாலை மிகவும் சேதமடைந்து பயன்படுத்துவதற்கு லாயக்கற்றதாக உள்ளது. மேலும், சாலையின் அகலம் குறைவாக உள்ளதால் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் எதிரெதிரே செல்வதும் சிக்கலாக உள்ளது. ஆகவே, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த திருப்போரூர் – நெம்மேலி இடையிலான சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.