பெரணமல்லூர், செப்.13: பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை செய்யாறு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் முருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் ஆசிரியர்களிடையே வரும் கல்வியாண்டில் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் படிக்கும் காலத்தில் சிறந்து படிக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் நீங்கள் முன்னேற முடியும். குறிப்பாக மாணவர்கள் அதிகாலையில் எழுந்து ஆசிரியர் நடத்தும் பாடங்களை நன்கு படித்து வந்தால் தேர்வு நேரத்தில் உங்களால் தேர்வுகளை நன்றாக எழுத முடியும். மேலும் நீங்கள் நன்றாக படித்து இந்த பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் நீங்கள் படிக்கும் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும் பெருமை கிடைக்கும் என்றார். ஆய்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கலைவாணன் உள்ளிட்ட சக ஆசிரியர் பலர் உடன் இருந்தனர்.