சவுத்ஹாம்டன்: இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா 3ஆட்டங்கள் கொண்ட டி20, 5ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சவுத் ஹாம்டனில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கி பந்து வீசியது. அந்த அணியில் ஜாமி ஓவர்டன், ஜேக்கப் பெட்ஹெல், ஜோர்டன் காக்ஸ் என 3வீரர்கள் சர்வதேச டி20 களத்தில் அறிமுகமாயினர். முதலில் களம் கண்ட ஆஸி 19.3ஓவரில் 179ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 41(26பந்து, 4பவுண்டரி 2 சிக்சர்), டிராவிஸ் ஹெட் 59(23பந்து, 8பவுண்டரி, 4சிக்சர்) ரன் வெளுத்தனர். இங்கி தரப்பில் லிவிங்ஸ்டோன் 3, ஜோப்ரா ஆர்ச்சர், ஷாகிப் முகமது தலா 2விக்கெட் எடுத்தனர்.
அதன்பிறகு 180ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 19.2ஓவரில் 151ரன்னுக்கு சுருண்டது. அதனால் ஆஸி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இங்கி அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 37(27பந்து, 4பவுண்டரி, 1சிக்சர்), கேப்டன் பில் சால்ட் 20(12பந்து, 4பவுண்டரி) ரன் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய ஆசி தரப்பில் ஷீன் அபோட் 3, ஜோஷ் ஹசல்வுட், ஆடம் ஸம்பா தலா 2விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டிராவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் 2வது ஆட்டம் இன்று கார்டிஃப் நகரில் நடக்கிறது.