ஸ்ரீ மந் நகர நாயிகா
நம்முடைய ஸ்தூல சரீரம் solid stateல் (திட நிலை) இருக்கிறது. நம்முடைய சூட்சும சரீரம் liquid stateல் (திரவ நிலை) இருக்கிறது. நம்முடைய காரண சரீரம் gaseous stateல் (வாயு நிலை) இருக்கிறது. இந்த காரண சரீரம் gaseous stateல் இருக்கிறதோ என்னமோதான் இல்லையோ என்று தெரியவில்லை. நாம் காரண சரீரத்தை ஆவி என்று சொல்கிறோம். பேய் பிசாசு என்று போகக்கூடாது. இந்த ஆவி என்பது நம்முடைய காரண் சரீரம்.
இந்த ஜென்மாவினுடைய காரணத்திற்கான பீஜம் என்கிற விதை விழும் சரீரமாகும். சூட்சும சரீரமானது நாம் எந்த சரீரத்தை எடுத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்ததுபோல் தன்னை மாற்றிக் கொள்வதால் அது நீருக்கு இணையாக சொல்லப்படுகின்றது.வெளிப் பிரபஞ்சமானது எப்படி திட பதார்த்தம், திரவ பதார்த்தம், வாயுவாக மாறியிருக்கிறதோ அதேபோன்று நம்முடைய மூன்று சரீரங்களும் திடமானது ஸ்தூலம், திரவமானது சூட்சும சரீரம், வாயுவானது காரண சரீரம் என்று வரையறுக்கிறோம். கோட்டைகளை பார்த்தோம்.
இப்போது அதிலுள்ள தோட்டங்களையும் பார்ப்போம்.
முதல் கோட்டையிலிருக்கக் கூடிய தோட்டத்தில் மகா காளரும், பத்ரகாளியும் இருக்கிறார்கள். அடுத்து இருக்கக்கூடிய கோட்டைகளில் ஆறு தோட்டங்கள் இருக்கின்றன. அதில் யார் இருக்கிறார்கள். ருது மாதர்கள் இருக்கிறார்கள். ஒரு வருஷத்தை நாம் வெளியே ருதுவாகப் பார்க்கிறோம். இது எல்லாமே நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறதெனில் காலத்தை காண்பித்துக் கொடுக்கின்றது. அந்த காலத்தை யார் கட்டுப்படுத்துகிறாரோ அந்த மகாகாளர் இதனுடைய முதல் தோட்டத்திலேயே இருக்கிறார். இந்த மகாகாளர்தான் காலத்தை கட்டுப்படுத்தக் கூடியவர்.
இந்த முதல் எட்டுமான கோட்டையிலுள்ள தோட்டங்கள் (physical state) ஸ்தூலமானது காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டது. இந்த காலத்தையும் இடத்தையும் தேசத்தையும் காலத்தையும் காண்பிக்கக் கூடியதுதான் முதல் எட்டு கோட்டைகளும், எட்டு கோட்டைகளுடைய தோட்டங்களும்…அந்த உலோகங்கள் அனைத்தும் இடத்தை காண்பித்துக் கொடுக்கின்றது. நடுவே இருக்கின்ற தோட்டங்கள் அனைத்தும் காலத்தை காட்டிக் கொடுக்கிறார்கள். ஸ்தூல சரீரம் என்பது தேசத்திற்கும் காலத்திற்கும், இடத்திற்கும் காலத்திற்கும் உட்பட்டது என்பதே இங்கு தாத்பரியமாகும்.
அடுத்ததாக இந்தப் பதினோரு ரத்தினக் கோட்டைகள் இருக்கக்கூடிய தோட்டங்கள் இருக்கின்றன. இந்த தோட்டங்களில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் சித்தர்கள், சாரணர்கள், அப்ஸர ஸ்த்ரீகள், வடுகர்கள், பைரவர்கள், அஷ்ட திக் பாலகர்கள் எல்லோரும் ஏன் இருக்கிறார்களெனில், இவர்கள் சூட்சுமமானவர்கள். சூட்சும ரூபத்தில் சட்டென்று நம் கண்களால் காண முடியாத அளவிற்கு இருப்பவர்கள். காலத்தையும் இடத்தையும் பார்க்கிறோம். உணர்கிறோம். ஆனால், இந்த சித்தர்கள்… முதல் மேலே சொன்னவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் ஆனால், சூட்சுமமாக இருக்கிறார்கள்.
அடுத்தும் உள்ளே போகும்போது மனோமயக் கோட்டை இருக்கிறது. மனம் புத்தி சூரிய மண்டலம் சந்திர மண்டலம் இந்த ஆறும் உள்ளது. இங்கு பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மன்மதன், சூரியன், சந்திரன் போன்றோர்கள் உள்ளனர். இவர்களின் இருப்பும் செயலும் இன்னமும் சூட்சுமமாக உள்ளது. இதில் பிரம்மா சிருஷ்டிக்கும், விஷ்ணு ஸ்திதிக்கும், ருத்ரன் சம்ஹாரத்திற்கும், சூரியன் பகல் நேரத்திற்கும், சந்திரன் இரவு நேரத்திற்கும், மன்மதன் இந்த உலக இயக்கத்திற்குக் காரண கர்த்தாவாக இருக்கிறார். அதனால் காரண சரீர நிலையில் இருக்கிறார்கள். அப்போது இந்த பேரும் பிரபஞ்சத்தினுடைய காரண கர்த்தாக்களாக இருப்பதால் காரண சரீர நிலைகளில் இருக்கிறார்கள்.
இப்போது மூன்று விஷயங்களையும் நாம் பார்க்கும்போது என்ன தெரிகிறதெனில், கோட்டைகளை நாம் மூன்றாக பெரும் பிரிவுகளாக பார்க்கின்றோம். அதில் இருக்கக்கூடிய தேவதைகள் மொத்தமாக நமக்கு imply பண்ணக் கூடிய விஷயமென்னவெனில், நம்முடைய சரீரத் திரயங்கள் இருக்கிறதல்லவா… ஸ்தூலம் சூட்சுமம், காரண சரீரங்களை காண்பித்துக் கொடுக்கின்றது. அம்பாளினுடைய ஸ்ரீ நகரம்தான் பிரபஞ்சத்தில் reflect ஆகிறது. அந்த reflect தான் இந்த சரீரத்திலும் reflect ஆகின்றது. இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்வோமா… அம்பாளினுடைய ஸ்ரீ நகரம்தான் வெளியிலே பார்க்கக்கூடிய இருக்கக் கூடிய பிரபஞ்சம். அந்த பிரபஞ்சத்தினுடைய reflection தான் இந்த சரீரம் என்கிற ஒரு alignment அந்த சாதகனுக்கு வருகிறது.
சாதாரணமாக இந்தப் பிரபஞ்சத்தை வெறும் பிரபஞ்சமாக மட்டுமே பார்க்கிறான். தன்னுடைய சரீரத்தை தன்னுடைய சரீரமாக மட்டுமே பார்க்கிறான். அவ்வளவுதான். அதிலிருக்கக்கூடிய விஷயங்களான சூட்சுமம், காரண சரீரம் குறித்துகூட யோசிப்பது கூட கிடையாது. இப்படி தன்னை வெறும் தேகமாகவும், தேகாத்ம புத்தியாகவும்… பிரபஞ்சத்தை அப்படியே பிரபஞ்சமாகவும் இருக்கின்ற அந்த நிலை மாறி ஒரு சாதகம் என்கிற நிலைக்கு வரும்போது குருவினுடைய அனுக்கிரகத்தினால் அம்பாளினுடைய அந்த ஸ்தானத்தை தியானம் பண்ணும்போது என்ன ஆகிறதெனில், அவன் இதுவரைக்கும் எதெல்லாம் அவன் சாதாரணமாக பார்த்தானோ அது பூராவுமே அவனுக்கு revelation கொடுக்கின்றது.
அவன் சாதாரணமாக பார்க்கிற சரீரமும் பிரபஞ்சமும் revelation கொடுக்கிறது. நாம் வெளியில் பார்க்கும் பிரபஞ்சமும் சரி சரீரமும் சரி வெளியில் நாம் பார்க்கிறோம். ஸ்ரீ நகரத்தினுடைய reflectionதான் இந்த பிரபஞ்சம். அந்த ஸ்ரீ நகரத்தினுடைய reflectionதான் இந்த சரீரம். இந்தவொரு பெரிய விஷயம் அவனுக்கு தெரிய வருகிறது.இப்போது இன்னொரு மிக மிக மிக முக்கியமான உச்சமான விஷயத்தை ஒரு சாதகன் அடைவதை பாருங்கள்…. இதுதான் இங்கு உச்சம்.இந்த alignment வரும்போது, இந்த சரீரம், வெளியில் இருக்கக் கூடிய பிரபஞ்சம், இதை எல்லாவற்றையும் கடந்து இருக்கக் கூடிய ஸ்ரீ நகரம்.
இந்த மூன்றும் எப்போது அந்த சாதகனுக்கு சித்திக்கின்றதோ அப்போது தன்னுடைய சரீரத்தை அவன் தனியாக பார்க்கறது கிடையாது. இந்தப் பிரபஞ்சத்தை அவன் தனியாகப் பார்க்கறது கிடையாது. எல்லாமே அவனுக்கு ஸ்ரீ நகரமாக தெரிகிறது. இன்னும் கேட்டால் பிரபஞ்சமும் ஸ்ரீ நகரமாக தெரிகின்றது. தன்னுடைய சரீரமும் ஸ்ரீ நகரமாகத் தெரிகின்றது. அப்போது அவனுக்கு என்னவொரு transformation நடக்கும்போது, குருவின் அனுக்கிரகத்தால் அந்த ஞானநிலை சித்திக்கும் போது அவனுக்கு இந்த alignment வருகின்றது. அப்படியில்லையெனில், இந்த alignment வரும்போது ஞானநிலை சித்திக்கின்றது. எது முதல் இது இரண்டாவது என்பதை விளக்க முடியாது. அம்பாளினுடைய ஸ்ரீ நகரம்தான் பிரபஞ்சமாக இருக்கிறது.
அம்பாளினுடைய ஸ்ரீ நகரம்தான் சரீரமாக இருக்கிறது. நாம் இவ்வளவுநாள் எந்த சரீரத்தையும் எந்த பிரபஞ்சத்தையும் ஒதுக்க வேண்டுமென்று நினைத்தோமோ அதாவது சரீரம் கர்மாவினால் வந்தது. அசுத்தமானது. இதுதான் நம்மை பந்தப்படுத்துகிறது என்று நினைத்தோமோ … இங்கு சரீரம் என்பது மூன்று சரீரங்களையும் சேர்த்துத்தான்…. இந்தப் பிரபஞ்சமும் நம்மை மாற்றுகின்றது என்கிற நிலை மாறி… இந்தப் பிரபஞ்சமும் சரீரமும் அவனுக்கு ஸ்ரீ நகரமாகத் தெரியும்போது ஸ்ரீ நகரம் தவிர வேறு எதுவுமே இல்லை என்று அதுவே நம்முடைய விடுதலைக்கும் ஒரு காரணமாக ஆகிறது.
இந்த விஷயம் எங்கு நமக்கு எடுத்துக் காட்டப்படுகிறதெனில், வேதத்தில் இருக்கிற பாவனோபநிஷத் காண்பிக்கின்றது. பாவனோபநிஷத் இந்த சரீரத்தை ஸ்ரீ சக்ரமாகச் சொல்கிறது. வெளியிலுள்ள பிரபஞ்சம் ஸ்ரீ சக்ரம். இந்த சரீரம் ஸ்ரீ சக்ரம். அந்த பாவனைக்கு வரும்போது மிகப் பெரிய ஒரு transformation நடக்கின்றது.ஏனெனில், ஸ்ரீ நகரத்திற்குள் யார் இருக்கிறாளோ அவள்தான் இந்த பிரபஞ்சத்திற்குள் சர்வ வியாபியாக இருக்கிறாள். எவள் இந்த பிரபஞ்சத்திற்குள் சர்வவியாபியாக இருக்கிறாளோ அவளேதான் இந்த சரீரத்திற்குள் சர்வ அந்தர்யாமியாக இருக்கிறாள்.இந்த ஞானம் அவனுக்கு சித்திக்கின்றது.
அப்போது இந்தகோட்டைகளையெல்லாம் அவன் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக கடந்து அந்தர்யாமியாக இருக்கும் அம்பிகையை அவன் தரிசிக்கின்றான்.அப்போது ஸ்ரீ மந் நகரம் எதுவெனில், இந்த சரீரம் ஸ்ரீ மந் நகரம். பிரபஞ்சம் ஸ்ரீ மந் நகரம். அம்பாள் இருக்கக் கூடிய அந்த ஸுமேரு மத்யத்தில் இருக்கக் கூடியது எதுவெனில் அதுவும் ஸ்ரீ மந் நகரம்.ஸ்ரீ நகரம் எப்படி பிரபஞ்சமாக reflect ஆகும் என்று தோன்றலாம். இப்போது ஒரு பிம்பம் இருக்கிறது. நாம் நிற்கிறோம். நமக்கு எதிரே பெரிய கண்ணாடி இருக்கிறது. சின்ன கண்ணாடி இருக்கிறது. இப்போது நம்முடைய பிம்பமானது பெரிய கண்ணாடியிலேயும் reflect ஆகும். சின்ன கண்ணாடியிலேயும் reflect ஆகும். பெரிய கண்ணாடிக்குள்ளேயும் உருவம் பெரிசா தெரியும்.
சின்ன கண்ணாடிகுள்ளேயும் உருவம் சிறியதாக தெரியும். எப்படி ஒரே நேரத்தில் நமது பிம்பமானது பெரிய கண்ணாடியிலேயும் சிறிய கண்ணாடியிலேயும் விழுகின்றதோ… ஸ்ரீ நகரம்தான் இந்த பிரபஞ்சமாக ஸ்ரீ நகரம்தான் இந்த சரீரமாக reflect ஆகுது. இந்த ஞானம் அவனுக்கு வரும்போது, இது எல்லாமுமே அவனுக்கு reflection என்று தெரிஞ்சதுக்கு அப்புறம், original ஆக இருக்கின்ற ஸ்ரீ நகரம் மட்டும்தான் அவனுக்கு தெரியுமே தவிர, இது எல்லாமே reflection என்பது அவனுக்கு தெரியும். இந்தக் கோட்டைகளெல்லாம் எப்படி தாண்டுகிறான் எனில், இது எல்லாமுமே பிரதிபிம்பம்… உண்மையான விஷயம் எது அப்படிங்கறது அவனுக்கு தெரிய வருகின்றது.
இதுதான் இந்த நாமா மூலமாக அந்த சாதகன் அடையக் கூடிய ஒரு நிலை.இதற்கு முந்தைய நாமங்களில் சிவசக்தி சம்மந்தத்தை தெரிந்து கொள்கிறான். ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்கிற நிலையில் மூன்று அவஸ்தைகளையும் தாண்டி துரீய நிலையை அறிந்து கொள்கிறான். கணபதி அதர்வ சீரிஷ உபநிஷதத்தில் சரீர த்ரயா தீதஹா… கால த்ரயா தீதஹா… அவஸ்தா த்ரயா தீதஹா… என்றெல்லாம் வரும். மூன்று சரீரங்களையும், மூன்று காலங்களையும், மூன்று அவஸ்தைகளையும் கடந்து இருக்கக் கூடியவர் என்று வரும். இப்போது இந்த நாமத்தில் இந்த சரீர திரயங்களைத் தாண்டி இருக்கக் கூடிய இந்த பிரஞ்சத்தை தாண்டி இருக்கக் கூடிய, இந்த சரீரத்தையும் பிரபஞ்சத்தையும் வியாபித்து இருக்கக்கூடிய உண்மைப் பொருள் எது என்று பார்க்கும்போது இந்த கோட்டைகளையெல்லாம் தாண்டி உள்ளே பிரவேசிக்கிறான்.
பிரவேசிக்கும் போது உண்மைப் பொருளை தரிசிக்கிறான்.இந்த நாமத்திற்கான கோயிலாக மிகவும் எளிமையாக எல்லோரும் தரிசிக்கக் கூடிய ஆலயமாகப் பார்க்கலாம். ஆச்சரியமாக இந்தக் கோயிலின் தலவரலாற்றில், “எட்டுப் பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்று சொல்வார்கள்.சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோயில்களில் கோட்டை மாரியம்மன் கோயிலே பெரியது. இதனாலேயே இது ‘‘கோட்டை பெரிய மாரியம்மன்” என்று அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.
இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது. இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் “கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி” என்பார்கள்.மாரியம்மனின் சிரசில் சுவாலை கிரீடம் அக்கினி சுவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.
அந்த கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாக உடுக்கையும் (டமருகம்), இடது மேற்கரத்தில் பாசமும் மற்றும் வலது கீழ்க்கரத்தில் திரிசூலமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் ஏந்தி வீற்றிருக்கிறாள். அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு சிவசக்தியாக ஈசான திசை நோக்கி அன்பும், கருணையும் ததும்பும் வடிவமாய், ஆனந்தம் பொங்கும் புன்முறுவல் முகத்தினை உடையவளாய் வீற்றிருந்து, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.(சுழலும்)
தொகுப்பு : ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா