சென்னை: விவசாயிகள் பயன்பெறும் வகையில் 9.24 கோடி மதிப்பில் சூரிய கூடார உலர்த்திகள், சூரிய மின்வேலி, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மற்றும் வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 9.24 கோடி மதிப்பில் 672 விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல், சூரிய மின்வேலி அமைத்தல், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்தல் மற்றும் வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, 9 விவசாயிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் முதற்கட்டமாக 3 கோடியே 81 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 70 சதவிகித மானியத்தில் 171 விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கப்படவுள்ளது. நடப்பாண்டில் 1.92 கோடி மதிப்பீட்டில் 256 விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக திட்டங்கள் பற்றிய விவரங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….