புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று பதிவிடுகையில், கடந்த 2018ல் டைமண்ட் பவர் இன்ப்ரா லிமிடெட் என்ற நிறுவனம் திவால் நிலைமைக்கு சென்று விட்டது. 2022ல் ரூ.1000 கோடி சந்தை மூலதனம் கொண்ட நிறுவனத்தை அதானியின் மைத்துனர் ரூ.501 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார். 2022ல் நிறுவனத்தின் வணிகம் பூஜ்யம் என்ற நிலையில் இருந்தது.ஆனால், 2023-24ல் அதன் வருவாய் ரூ.344 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலும் அதானி நிறுவனத்தால் ஆர்டர் செய்யப்பட்டவையாகும்.அதானி நிறுவனத்துடனான வர்த்தகங்களால் டைமண்ட் பவர் இன்ப்ரா இப்போது ரூ.7,626 கோடி நிறுவனமாக உயர்ந்துள்ளது. இது மதிப்பீட்டில் ஏழு மடங்கு அதிகரிப்பு.
அதானி நிறுவனத்துடனான பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் வெளிப்படையான செயல்பாடுகளின் கீழ் வராது.எனவே இந்த இரு நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே உள்ள குடும்ப உறவுகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதும் இல்லை. நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நீக்குவதற்கு அதானி நிறுவனத்தின் ஊழல்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு(ஜேபிசி) விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.