Friday, September 20, 2024
Home » வேக்சிங் செய்யப் போறீங்களா?

வேக்சிங் செய்யப் போறீங்களா?

by Porselvi

உடலில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பெண்கள் பயன்படுத்தும் முறைகளில் ஒன்று வேக்சிங்.அழகு நிலையங்களில் மட்டுமே வேக்சிங் செய்ய முடியும் என்ற நிலைமை மாறி தற்போது எளிமையான முறையிலேயே பலர் செய்து கொள்கின்றனர். இவ்வாறு வேக்சிங் செய்யும் போது சற்றே கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். இல்லை என்றால் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகக் கூடும். இதை தவிர்க்க சில ஆலோசனைகள்.

சருமத்தைத் தயார்படுத்துதல்

வேக்சிங் செய்வதற்கு முன்பு, அதற்காக சருமத்தை சரியான முறையில் தயார்படுத்த வேண்டும். இல்லா விடில் நாம் பயன்படுத்த கூடிய கிரீம், மெழுகு தோலில் அரிப்பை ஏற்படுத்தக் கூடும்.முதலில் சருமத்தில் இருக்கும் வியர்வை, அழுக்கு ஆகியவற்றை சுத்தமான ஈரத்துணியால் மென்மையாக துடைத்து நீக்க வேண்டும். பிறகு உலர்ந்த துணியால் ஈரமில்லாத வகையில் சருமத்தைத் துடைக்க வேண்டும்.உங்கள் சருமத்துக்கு ஏற்ற கிரீம் அல்லது ஜெல்லை பயன்படுத்துவது முக்கியம். இது வேக்சிங் செய்தபிறகு சருமம் வறண்டுபோவதை தடுக்கும். வேக்சிங் செய்ய தொடங்கும் முன்னர், சருமத்தில் தாராளமாக டால்கம் பவுடர் பூச வேண்டும்.

மெழுகைப் பயன்படுத்துதல்

முடி மற்றும் தோலின் மீது நன்றாகப் படும்படி ஹனி-மெழுகைத் தடவ வேண்டும். அதிகமாக தடவினால் முடியை சரியாக அகற்ற முடியாது. எனவே ஒவ்வொரு பகுதியிலும் மெல்லிய அடுக்காக மெழுகைத் தடவ வேண்டும். முடியை அகற்றும்போது ஸ்டிரிப்பை வேகமாக எதிர்திசையில் இழுக்க வேண்டும்.

சீரான வெப்பநிலை

மெழுகு, சூடு குறைவாக இருந்தால் சருமத்தில் திறம்பட ஒட்டாது. அதே சமயம் அதிக சூடாக இருந்தால் தோலில் காயம் உண்டாக நேரிடும். நீங்கள் ஒரு வேளை கூல் வேக்சிங் பயன்படுத்துவதாக இருந்தால் அறை வெப்பநிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இது பயன்படுத்த எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.மெழுகைச் சருமத்தில் தடவுவதற்கு முன்பு காயங்கள், சிராய்ப்பு, புண் என ஏதேனும் உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அவற்றை பேண்டேஜ் கொண்டு மூட வேண்டும். அவ்வாறு செய்யாமல் சூடான மெழுகை அப்பகுதியில் தடவி வேகமாக இழுக்கும்போது காயங்கள் மேலும் அதிகமாகக் கூடும். மேலும் க்ரீம்கள் பயன்படுத்தும் போது காயங்கள் இருக்கும் பகுதியைத் தவிர்க்க வேண்டும்.

இழுக்கும் முறை

வேக்சிங் செய்வதற்காக பூசப்படும் மெழுகை எவ்வாறு அகற்றுகிறோம் என்பது முக்கியம். மெழுகை மெதுவாகத் தடவ வேண்டும். பின்னர் அதை அகற்றும் போது ஸ்டிரிப்பை வேகமாகவும், ஒரே சீராகவும் பிடித்து இழுக்க வேண்டும். வேக்சிங் செய்யும் முறையைப் பற்றி தகுந்த நிபுணரிடம் முழுவதுமாக தெரிந்து கொண்ட பின்பு வீட்டில் சுயமாக செய்து கொள்வது பாதுகாப்பானது. க்ரீம்கள், வேக்சின் மெழுகுகள் எல்லாம் அலர்ஜி உண்டாக்குகின்றன எனில் பாரம்பரிய ரேசர் முறைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் ஆண்கள் பயன்படுத்தும் ரேசர்களை பயன்படுத்தாமல் பெண்களுக்கென பிரத்யேகமாக சந்தையில் இருக்கும் ரேசர்களை பயன்படுத்துதல் நல்லது. ரேசர்களைப் பயன்படுத்திய பின் அதற்கென இருக்கும் ஜெல்கள் அல்லது எண்ணெய்களைத் தடவி சருமத்தை தகுந்த ஈரப்பதத்துக்குக் கொண்டு வருவதும் அவசியம். ரேசர்களை பொறுமையாக, மெதுவாகக் கையாள்வதும் அவசியம். காஸ்மெட்டிக் அலர்ஜி இருப்பின் தேங்காய் எண்ணெய் தடவுவது அவசியம்.

– அ.ப. ஜெயபால்.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi