சேலம், செப்.11: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தூர்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவரை கடந்த 2019ம் ஆண்டு சேலம் ரயில்வே போலீசார், செல்போன் திருடிய வழக்கில் கைது செய்தனர். சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிரகாஷ், ஜாமீனில் வெளியே வந்தார். இந்த திருட்டு வழக்கு சேலம் ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 6 மாதமாக அவ்வழக்கில் ஆஜராகாமல் பிரகாஷ் தலைமறைவானார்.
இதனால், தலைமறைவாக இருக்கும் பிரகாசை கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்ஐ கோபண்ணா, ஏட்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், 6 மாதமாக தலைமறைவான பிரகாசை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று, மல்லூர் பகுதியில் பிரகாசை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் ஜே.எம்.3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையிலடைத்தனர்.